Published : 31 Dec 2020 01:53 PM
Last Updated : 31 Dec 2020 01:53 PM

காற்றின் திசைவேக மாறுபாடு; 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (ஜன.01) கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

ஜன.02 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

ஜன.03, ஜன.04 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

கொள்ளிடம் (நாகப்பட்டினம்) 9 செ.மீ., திண்டிவனம் (விழுப்புரம் ) 7 செ.மீ., செஞ்சி, மரக்காணம் (விழுப்புரம்) தலா 6 செ.மீ., ஆடுதுறை (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு), விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 5 செ.மீ., ராமேஸ்வரம், கடலூர், பாண்டிச்சேரி தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

டிசம்பர் 31, ஜனவரி 01 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x