Last Updated : 31 Dec, 2020 01:06 PM

 

Published : 31 Dec 2020 01:06 PM
Last Updated : 31 Dec 2020 01:06 PM

கோவை மாவட்டத்தில் பரவலான மழையால் போக்குவரத்து நெரிசல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தின் காலநிலையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் லேசான வெப்பம் காணப்பட்டது. பெரும்பாலான நேரங்களில் இருண்ட வானிலையே தென்பட்டது.

பொழுது விடிந்தால்கூடச் சூரியன் தென்படவில்லை. மதியம் 12 மணி வரை இந்தக் கால நிலையே நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவியது. இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் சற்று அதிகரித்துக் காணப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (டிச.31) சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழைப் பெய்து வருகிறது. காந்திபுரம், ரத்தினபுரி, கணபதி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், போத்தனூர், பேரூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, செட்டி1பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

பல இடங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் மாநகரில் வாகனங்கள் அதிகம் சென்று வரும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை பொய்த்துப் போன நிலையில், தற்போது மழை பெய்து வருவது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளவாறு ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x