Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ‘சிவ, சிவ’ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவை தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள். (அடுத்த படம்) திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்துக்கு பின் சிவகாமி அம்மையாருடன் காட்சியளித்த மரகத நடராஜர்.

கடலூர் / ராமநாதபுரம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேற்று நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் நடராஜ பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மஹாஅபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்பகுதி திருவாபரண அலங்காரத்தில் நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மதியம் 4 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதியுலா முடிந்து தீர்த்தவாரி நடந்தது.

பின்னர் மாலை 5 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, மேளதாளம் முழங்கிட, வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும், ஆனந்த தாண்டவ நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தபடி சித்சபைக்கு சென்றனர். அப்போது சிவ, சிவ முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருஉத்தரகோசமங்கை

இதேபோன்று, ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி கோயிலில் மூலவர் பச்சை மரகத நடராஜர் சிலை என்பதால் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பால் பாதுகாக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசனத்துக்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் நடக்கும்.

நேற்று முன்தினம் காலை மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் அதன்பின் 32 வகையான மகாபிஷேகம் நடைபெற்றது. சந்தனம்படி களையப்பட்டு ஒரு நாள் மட்டும் கல் திருமேனியாய் காட்சியளித்த மரகத நடராஜருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி, விடிய, விடிய நடந்தது. நேற்று அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x