Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம்: மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள `நம்ம சென்னை' செல்ஃபி மையம். படம்: பு.க.பிரவீன்

சென்னை

மாநகராட்சி சார்பில் இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ‘நம்ம சென்னை’ செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும்பகுதியாக மெரினா கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை அதிகஅளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது.இன்றைய இளைய தலைமுறையினர், ஸ்மார்ட் கைபேசிகளை பயன்படுத்துவதிலும், அதில் செல்ஃபி எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில், சென்னையின் அடையாளமாக, இளைஞர்களை கவரும் விதமாக ஓர் இடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் ரூ.20லட்சம் செலவில் மெரினா கடற்கரையில், ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் ‘நம்ம சென்னை’ செல்ஃபிமையத்தை அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்த செல்ஃபி மையம் நிச்சயம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். இந்த இடம் சென்னையின் அடையாளமாகவும் மாற வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளும் விரைவில் முடிய உள்ளன. இந்த செல்ஃபி மையத்தை பொங்கல் திருவிழாவின்போது, முதல்வர் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

ஏற்கெனவே கோவை மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளில், ‘ஐ லவ் கோவை’, ‘ஐ லவ் ஆவடி’ என செல்ஃபி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இந்த செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x