Last Updated : 30 Dec, 2020 08:30 PM

 

Published : 30 Dec 2020 08:30 PM
Last Updated : 30 Dec 2020 08:30 PM

தேனியில் ரூ.4.51 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கினார்

தேனி

தேனியில் நடந்த அரசு விழாவில் 10ஆயிரத்து 954 பயனாளிகளுக்கு ரூ.4.51கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

அடிப்படைத் தேவையான உணவிற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் விலையில்லா அரிசியும், வேட்டி,சேலையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

அதே போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பசுமைவீடுகட்டும் திட்டம், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற உலகத்தரம் வாய்ந்த கல்வியினை ஏழை மாணவ, மாணவியர் பெற வறுமை தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இலவச நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணங்கள், மிதிவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்பேசினார்.

நிகழ்ச்சியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் 4ஆயிரத்து 853 மாணவர்களுக்கு ரூ.196.20லட்சம் மதிப்பிலும் 5ஆயிரத்து 592 மாணவியர்க்கு ரூ.215.90லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 10ஆயிரத்து 954பயனாளிகளுக்கு ரூ.4.51கோடி மதிப்பிலான நலத்திட்ட உதுவிகள் வழங்கப்பட்டது.

விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்டிகே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, முதன்மைக் கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இரா.நிறைமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு கட்சி துவங்குவதை கைவிட்டுள்ளார். இதை நான் வரவேற்கிறேன். அவர் நீண்ட ஆயுளுடன் உடல்நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ள நிலையில் நானும் பிரசாரத்தை விரைவில் துவங்க இருக்கிறேன். அதிமுக.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x