Last Updated : 30 Dec, 2020 06:02 PM

 

Published : 30 Dec 2020 06:02 PM
Last Updated : 30 Dec 2020 06:02 PM

யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் ஸ்டாலின் வெற்றியைத் தடுக்க முடியாது: கனிமொழி எம்.பி கருத்து

தென்காசி

யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் ஸ்டாலின் வெற்றியைத் தடுக்க முடியாது என கனிமொழி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

தென்காசி மாவட்டத்தில் 2 நாள் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நான் பிரச்சாரம் மேற்கொண்ட எல்லாப் பகுதிகளிலும் திமுகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. திமுக ஆட்சி வர வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

பொங்கல் பண்டிகையையொட்டி 2500 ரூபாய் கொடுக்கக் கூடாது என்று திமுக சொல்லவில்லை. கரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோதே ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கூறினார்.

இப்போதும் அதைத் தான் வலியுறுத்தினார். 2500 ரூபாய் கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் புகைப்படம் மற்றும் அதிமுக கட்சி கொடி வண்ணத்துடன் டோக்கன் வழங்குவது தவறானது.

திமுகவின் பிரச்சார உத்தியை எல்லா கட்சிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. வெறும் கோஷங்களால் வெற்றி பெற முடியாது. மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திமுகவின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. அதேபோல் யார் போட்டியிட்டாலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றியை தடுக்க முடியாது.

கூட்டணியில் யார் யாரெல்லாம் பலமாக இருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டுதான் ஒரு கூட்டணியை திமுக தலைவர் உருவாக்கியுள்ளார். தேர்தல் அறிக்கைக் குழு மக்களை சந்தித்து, அவர்களது கோரிக்கைகளை கேட்டு வருகிறது. அதற்குப் பின்னர், மக்கள் கூறிய கருத்துகள், கோரிக்கைகளை ஆய்ந்த பின்னர் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

அதிமுக அரசு எந்த வாக்குறுதியை நிறைவேற்றியது?. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. தொடர்ந்து அடிக்கல் நாட்டக்கூடிய ஒருவராகத்தான் தமிழக முதல்வர் இருக்கிறார்.

எதையும் செய்து முடிக்கக்கூடிய முதல்வராக அவர் பணியாற்றவில்லை. கூட்டணி முடிவுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x