Published : 30 Dec 2020 03:55 PM
Last Updated : 30 Dec 2020 03:55 PM

ஆமை வேகத்தில் நடைபெறும் புதிய பாம்பன் ரயில் பாலப்பணிகள்: ஆர்டிஐ தகவலில் அம்பலம்

ராமேசுவரம்

பாம்பன் கடலில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலத்தின் பணிகள் 18 சதவீதமே நிறைவடைந்துள்ளதாக தகவல் உரிமை சட்டத்தில் அரசு பதில் அளித்துள்ளது.

பாம்பன் ரயில் பாலம் கட்டடப்பட்டு 106 ஆண்டுகளைக் கடந்து விட்டதாலும், பாலத்தில் அடிக்கடி விரிசல் விழுவதாலும் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான முடிவினை மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது.

தொடர்ந்து இந்திய ரயில்வே சார்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கன்னியாகுமரியில் 1.3.2019 அன்று நடந்த நிகழ்ச்சியில் கானொலி மூலம் பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து 11.08.2019 அன்று பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. இதற்காக இரும்பு மிதவைகளில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக புதிய பாம்பன் பாலப் பணிகள் சில மாதங்கள் தடைபட்டது. தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை மற்றும் பாம்பன் வடக்கு கடற்பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் ஆகியவற்றின் காரணமாக புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த மிதவைகள், மிதவைகளிலிருந்த கிரேன்கள் காற்றின் வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனாலும் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி குறித்து தகவல் கேட்டார்.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் அளித்த பதில் விவரம் வருமாறு,

புதிய பாம்பன் பாலத்தின் பணிகள் கடந்த 01.09.2019 அன்று துவங்கப்பட்டது. இதன் திட்டச் செலவு ரூ. 279.9 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. ஒப்பந்தக்காரரின் பெயர் எம்.எஸ்.ரஞ்சித் பில்ட்கான் லிமிடெட், அகமதாபாத்.

புதிய பாலத்தின் பணிகள் நிறைவு தேதி 31.09.2021. இதுவரை கடலில் 57 பைல்கள், 3 பைல் தொப்பிகள், 2 தூண் தொப்பிகள் அமைக்கும் பணி என 18 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இந்த புதிய பாலத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம் இரண்டு வருடத்திற்குள் அதாவது செப்., 2021க்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தாலும் கடந்த ஒண்ணே கால் ஆண்டில் வெறும் 18 சதவீதம் மட்டுமே புதிய பாலத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இனியும் ஆமை வேகத்தில் புதிய பாலத்தின் பணிகள் நடைபெறாமல் விரைவுப் படுத்த வேண்டும் என்பதே ராமேசுவரம் வரும சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x