விருப்பத்துக்கு மாறாக ரஜினியைக் கட்சி தொடங்க அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம்: திருமாவளவன் கருத்து

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.
Updated on
2 min read

நடிகர் ரஜினிகாந்தின் விருப்பத்திற்கு மாறாக அவரைக் கட்சி ஆரம்பிக்கக் கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இன்று (டிச.30) செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

"கடலூர் மாவட்டத்தில் கடுமையான மழை பெய்து, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 100 கிராமங்களுக்கு மேல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் இதுவரை நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை.

தமிழக அரசு, பொங்கல் பண்டிகைக்கு ரூபாய் 2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில், இதனை அதிமுக கட்சி வழங்குவதுபோல் தோற்றத்தை ஏற்படுத்துவது ஊழலை விட மோசமானது. எனவே, இதனை அரசு அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் 30 ஆயிரம் பேருக்கு 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நடிகர் ரஜினி, தன் உடல் நிலையைக் காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவர்கள் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

ஓராண்டுக்கு முன்பு நான் ரஜினியைச் சந்தித்தபோது அவர் அரசியலில் ஈடுபட ஆர்வம் இருப்பதாகக் கூறினார். தற்போதைய நிலையில் அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது விருப்பத்திற்கு மாறாக அவரைக் கட்சி ஆரம்பிக்கக் கூறியவர்கள், அழுத்தம் கொடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவே கருதுகிறேன். இதில் குறிப்பாக சங் பரிவார், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

இதனால் அதிமுகவை உடைக்கும் எண்ணத்தில் இருந்தவர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. அதிமுகவும் தற்காலிகமாகத் தப்பித்துள்ளது. ரஜினி கட்சி ஆரம்பித்தாலும், ஆரம்பிக்காவிட்டாலும் திமுக கூட்டணிக்குப் பாதிப்பு இருக்கப்போவதில்லை.

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இது ஆன்லைன் வர்த்தகத்திற்குத்தான் பயன்படும். பொது விநியோகத்தை அழிக்கின்றது. எனவே, அந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 30 வருடங்களாக தினக்கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் 140 பேரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் நியாயமானது. நிர்வாகச் செலவுகளைக் காரணம் காட்டி மாணவர்கள் தலையில் சுமையை வைக்கக்கூடாது.

சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலியாக உள்ளவர்களையும் நிரந்தரமாக வேண்டும். கடலூர் மாவட்டம் அடிக்கடி புயல், மழை உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படுவதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வரும் கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

மாவட்டச் செயலாளர் பால அறவாழி, நிர்வாகிகள் தாமரைச்செல்வன், செல்லப்பன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in