Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM

பாலியல் வன்கொடுமை செய்து 7 வயது சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை: புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுக்கோட்டை அருகே 5 மாதங் களுக்கு முன் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞருக்கு 3 தூக்கு தண்டனை விதித்து புதுக் கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று முக்கியத் தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் 30-ம் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார்.

காவல் நிலையத்தில் புகார்

இதுகுறித்து அவரது பெற் றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள் ஜூலை 1-ம் தேதி அங்குள்ள கண் மாய் கரையோரம் புதருக்குள் அந்தசிறுமி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது சடலத்தை போலீஸார்கைப்பற்றி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய ஏம்பல் அம் மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்ற சாமிவேல் (27) என்பவரை ஜூலை 2-ம் தேதி கைது செய்தனர்.

தப்பி ஓட்டம்

பின்னர், மருத்துவப் பரி சோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூலை 16-ம் தேதி சாமிவேல் சேர்க்கப்பட்டார். போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையில் திடீரென அவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, அடுத்த சில மணி நேரங்களில் அவரை போலீஸார் தேடிப் பிடித்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத் தில் கடந்த செப்.9-ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆர்.சத்யா நேற்று தீர்ப்பு அளித்தார்.

அந்தத் தீர்ப்பில் கூறியிருப்ப தாவது: சிறுமியை கொலை செய்ததற்கு ஒரு தூக்கு தண்டனை, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்தச் சட்டம் (போக்ஸோ) 2019-ன் கீழ் மற்றொரு தூக்கு தண்டனை, அதே சட்டத்தில் மற்றொரு பிரிவின் கீழ் மேலும் ஒரு தூக்கு தண்டனை என மொத்தம் 3 தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

7 ஆண்டுகள் சிறை

இதுதவிர, எஸ்சி-எஸ்டி வன் கொடுமைக்கு எதிரான தடுப்பு சட் டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனை, பிரிவு 363 மற்றும் 201-ன் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் கட் டத் தவறினால் மேலும் தலா 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

மேலும், சிறுமியின் தாயாருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவா ரணம் வழங்க வேண்டும். இந்த வழக்குஅரிதினும் அரிதான வழக்கு என்பதாலும் 7 வயது சிறுமி பல வகையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடுமையான முறையில் கொலை செய்யப்பட் டதாலும் 3 தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தீர்ப்புக்கு பின்னர் சாமிவேலை மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். இந்த வழக்கின் தீர்ப்பையொட்டி நேற்று காலையில் இருந்தே நீதிமன்றம் பரபரப்புடன் காணப் பட்டது.

3 மாதங்களில் தீர்ப்பு

இந்த வழக்கானது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தை களை பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ) 2019-ல் திருத்தம் செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ்பதிவு செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட முதல் வழக்காகும்.

இந்த வழக்கில் மொத்தம் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக வாதாடிய அரசு வழக்கறிஞர் அங்கவியை நீதிபதி சத்யா பாராட்டினார். தீர்ப்பு எழுத பயன்படுத்திய பேனாவை நீதிபதி உடைத்து தூக்கி எறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x