Published : 29 Dec 2020 05:29 PM
Last Updated : 29 Dec 2020 05:29 PM

என் ரஜினி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்: கமல்ஹாசன் பேச்சு

என் ரஜினி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் இன்று (டிச.29) திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

"மயிலாடுதுறையில் குவிந்து கிடக்கும் குப்பைகள், தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆகிய அவலங்கள் மக்கள் நீதி மய்ய ஆட்சியில் களையப்படும்.

நான் யாருக்கும் அடிமை இல்லை. நான் யாருக்கும் அரசன் இல்லை. தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. கல்வி பட்ஜெட் ஒரு மாணவனுக்கு ரூ.45 ஆயிரம் வருகிறது. ஆனால், பள்ளிகள் தரமானதாக இல்லை. சாகாமலேயே நரகத்தைப் பார்க்க வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றாலே போதுமானது.

பள்ளிக்கூடங்களை அவசர அவசரமாக மூடிவிட்டு, சாராயக் கடையைத் திறக்கிறது அரசு. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இந்தியாவிலேயே தமிழகம் 3-வது இடம் வகிக்கிறது. முதல் இடத்தை நோக்கி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி அரசியல் பழி போடும் கட்சி அல்ல. அரசியல் பழிவாங்கும் கட்சியும் அல்ல. வழிகாட்டும் அரசியல். மக்கள் நீதி மய்யம் கட்சியை மரியாதை இல்லாமல் விமர்சிப்பவர்களை எதிர்த்து விமர்சனம் செய்ய மாட்டோம்.

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா என்று விமர்சனம் செய்கிறார்கள். 44 ஆண்டுகால ஆட்சியில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே சினிமாவில் தொடர்பு உள்ளவர்கள்தான். எங்களை வைத்து நீங்கள் அரசியல் செய்யலாம். நாங்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? ரஜினி எடுத்த முடிவில் சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்".

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x