Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

கணினியில் தானே தட்டச்சு செய்து எழுதி வரும் 95 வயது சம்ஸ்கிருத பண்டிதருக்கு பிரதமர் மோடி பாராட்டு

தனது 95 வயதிலும் கணினியில் தானே தட்டச்சு செய்து நூல்கள் எழுதி வரும் சம்ஸ்கிருத பண்டிதர் டி.சீனிவாசாச்சாரியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரி வித்துள்ளார்.

சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டி.சீனிவாசாச்சாரியார் (வயது 95). தமிழ்மற்றும் சம்ஸ்கிருதம் இரண்டிலும்புலமை மிக்கவர். சென்னை மயிலாப்பூரில் உள்ள  வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் அர்ச்சகராக பணிபுரிந்துள்ளார். ஆன்மிகம் தொடர்பாக 16 நூல்கள் எழுதியுள்ளார்.

மதுராந்தகம் சம்ஸ்கிருத கல்லூரியில் சிரோன்மணி பட்டம்பெற்ற இவர் சிறுவயது முதலேஅச்சகம் வைத்து நடத்தியுள்ளார். அச்சகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், அகோபில மடத்தில் 42, 43-வதுஜீயர்களிடம் வேதாந்த, தர்ம சாஸ்திரங்கள், பாஞ்சராத்ர ஆகமங்களைக் கற்றுள்ளார்.

இந்நிலையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் உரையாற்றும்போது, தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசாச்சாரியார் தனது95 வயதிலும் கணினியில் தானேதட்டச்சு செய்து புத்தகம் எழுதுகிறார்.

அவரது இளமை காலத்தில் கணினி இருந்திருக்காது. கல்லூரி நாட்களிலும் இல்லை. இளமைப் பருவத்தில் இருந்தது போலவே இப்போதும் அவரது மனதிலும் தன்னம்பிக்கையும் ஆர்வமும் இருக்கிறது. நம் வாழ்நாள் முழுவதும் ஆற்றல் நிரம்பியுள்ளது. வாழ்க்கையில் ஆர்வம் இருக்கும் வரை ஒருவருக்கு இறப்பில்லை என்பதற்கு சீனிவாசாச்சாரியாரின் வாழ்க்கை ஓர் உதாரணம்” என்றுகுறிப்பிட்டார்.

பிரதமர் பாராட்டு தெரிவித்தது குறித்து சீனிவாசாச்சாரியாரிடம் கேட்டபோது, “பிரதமர் பாராட்டியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவருக்கு என்னைப் பற்றி எப்படி தெரிந்ததுஎன்பது இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. ஆன்மீகம் தொடர்பாக எழுதி வருகிறேன். கடந்த 2000-ம் ஆண்டு கணினி பயிற்சி அதன்மூலமாக தானேதட்டச்சு செய்து எழுதி வருகிறேன். சிறுவயதில் அச்சகம் வைத்து நடத்தி வந்தேன். பின்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார்போல், கணினியில் தட்டச்சு செய்ய கற்றுக் கொண்டேன். கடந்த 2000-ம் ஆண்டு முதல் நானே தட்டச்சு செய்து வருகிறேன். இதுவரை 16 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் இந்து கோயில்கள் தொடர்பானவை” என்றார்.

தனது சம்ஸ்கிருத சேவைக்காக பாஞ்சராத்ர பஞ்சானனா, கைங்கர்ய மான்,  பாஞ்சராத்ர ஆகம மார்த்தாண்ட, அகோபில மடத்தின் ஆஸ்தான வித்வான், ஸ்மிருதி பாஸ்கரா, தர்மசாஸ்த்ர விஷாரதா, தர்மசாஸ்த்ர விஹக்‌ஷனா, வேதாந்த ஆகமவாசஸ்பதி, ராமானுஜ சேவா ரத்னா, நல்லோர் விருது, சென்னை சம்ஸ்கிருத அகாடமியின் வைஷ்ணவ ஆகம ரத்னா உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இன்றும் 30-க்கும்மேற்பட்ட சீடர்களுக்கு வேதாந் தம்,  பாஞ்சராத்ர வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x