சாலை ஆக்கிரமிப்பை அகற்றியபோது மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது: என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாபாரிகள் மறியல்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றியபோது மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது: என்.எஸ்.சி. போஸ் சாலையில் வியாபாரிகள் மறியல்
Updated on
1 min read

சாலை ஆக்கிரமிப்பை அகற்றியபோது மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி மாலையில் 10-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகளுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. வியாபாரிகள் ஒன்று சேர்ந்து மாநகராட்சி ஊழியர்களை தாக்கினர்.

இதில் மாநகராட்சி ஊழியர் கள் வெங்கடேசன், பிரமிளா, மோசஸ், ஏழுமலை, பாஸ்கர் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்கள் கொடுத்த புகாரின்பேரில், எஸ்பிளனேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள் அமீது (20), அலி நைனா (19) ஆகியோரை நேற்று முன்தினம் மாலையில் கைது செய்தனர்.

மாநகராட்சி ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்டித்து என்எஸ்சி போஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் வியாபாரிகள் மறியல் செய்தனர். போலீஸார் வந்து அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in