Last Updated : 28 Dec, 2020 09:02 PM

 

Published : 28 Dec 2020 09:02 PM
Last Updated : 28 Dec 2020 09:02 PM

தேவகோட்டை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டி இயங்காததால் அழுகும் பிரேதங்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் 3 மாதங்களாக குளிர்சாதனப் பெட்டி இயங்காததால் பிரேதங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். விபத்துகளில் இறந்தோர், தற்கொலை செய்து கொண்டோர், கொலை செய்யப்பட்டோரின் உடல்கள் இங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்படுகின்றன.

பிரேதப் பரிசோதனை செய்வதற்குத் தாமதம் ஏற்பட்டதால் பிரேதங்களைப் பதப்படுத்தி வைக்க குளிர்சாதனப் பெட்டி உள்ளது. ஆனால், அந்தக் குளிர்சாதனப் பெட்டி 3 மாதங்களுக்கு மேலாக இயங்கவில்லை. இதனால் இறந்தோரின் உறவினர்களே தனியாரிடம் வாடகைக்கு குளிர்சாதனப் பெட்டி வாங்கிக் கொடுக்கும் நிலை உள்ளது.

மேலும், பிரேதப் பரிசோதனை அறையில் முறையாக மின்சார வசதியும் இல்லாததால் வாடகைக்கு எடுத்து வரும் குளிர்சாதனப் பெட்டியைப் பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. தவிர இறந்தோர் அடையாளம் தெரியாவிட்டால், உறவினர்கள் வரும் வரை, உடல்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும். தற்போது குளிர்சாதனப் பெட்டி இயங்காததால் பிரேதங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுவன்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் செல்வம் கூறுகையில், ‘‘ குளிர்சாதனப் பெட்டியை வெளியில் வாடகைக்கு எடுத்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. ஏழைகள் எப்படி வாடகைக்கு எடுக்க முடியும். பெரும்பாலும் விபத்து, தற்கொலை, கொலையாக இருந்தால்தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.
அந்தச் சமயத்தில் அவர்களது குடும்பத்தினரிடம் குளிர்சாதனப் பெட்டியை வாடகைக்கு எடுக்கச் சொல்வது வேதனையாக உள்ளது’’ என்று கூறினார்.

இதுகுறித்து மருத்துவமனை இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் கூறுகையில், ‘‘ பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியைப் பழுதுபார்க்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் புதிய குளிர்சாதனப் பெட்டி கேட்டு அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x