Last Updated : 28 Dec, 2020 08:59 PM

 

Published : 28 Dec 2020 08:59 PM
Last Updated : 28 Dec 2020 08:59 PM

இளையான்குடி அருகே பல நூறு ஏக்கரில் அழுகிய நெற்பயிர்கள்: புயல் நிவாரணத்தில் சேர்க்க விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பல நூறு ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகின. அவற்றைப் புரெவி புயல் நிவாரணத்தில் சேர்க்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இளையான்குடி, சாலைக்கிராமம், முனைவென்றி, சூராணம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் நெல், மிளகாய் சாகுபடி செய்யப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வறட்சி நிலவியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வறட்சி நிவாரணம் கேட்டு தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்த ஆண்டு அப்பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் புரெவி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பி, விவசாயி நிலங்களில் மழை நீர் சூழ்ந்தது. பல நாட்களாகத் தண்ணீர் வெளியேறாததால் நெற்பயிர்கள் அழுகின.

இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டியும் ஆய்வு செய்தார். ஆனால், பல நூறு ஏக்கரில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் கணக்கெடுப்பில் விடுபட்டுள்ளன. அவற்றையும் புரெவி புயல் நிவாரணத்தில் சேர்க்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து முத்துராமலிங்கபுரம் கிராம விவசாயிகள் கூறுகையில், "எங்கள் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 100 ஏக்கருக்கு மேல் புரெவி புயல் நிவாரணத்தில் சேர்க்கவில்லை. அவற்றையும் சேர்த்து நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x