Last Updated : 28 Dec, 2020 08:35 PM

 

Published : 28 Dec 2020 08:35 PM
Last Updated : 28 Dec 2020 08:35 PM

காரைக்குடி அருகே மினி கிளினிக்கைப் பிரித்துக் கொண்ட இரு கிராம மக்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மினி கிளினிக்கை இரு கிராம மக்கள் பிரித்துக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 மொபைல் கிளினிக் உட்பட 36 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன. அவற்றைப் படிப்படியாக கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து வருகிறார்.

காரைக்குடி அருகே சிறுகப்பட்டி ஊராட்சி பெத்தாச்சிக் குடியிருப்பில் மினி கிளினிக் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆளும்கட்சியினர் தலையீட்டால் சிறுகப்பட்டியில் உள்ள நூலகக் கட்டிடத்தில் மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து பெத்தாச்சிக் குடியிருப்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுகப்பட்டி கிராம மக்களும் மினி கிளினிக்கை விட்டுக்கொடுக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

இதனால் மினி கிளினிக்கைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் டிச.26-ம் தேதி நடக்கவிருந்த திறப்பு விழாவும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இரு கிராம மக்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு நாள் விடுமுறையைத் தவிர்த்து 3 நாட்கள் பெத்தாச்சிக் குடியிருப்பிலும், மீதமுள்ள 3 நாட்கள் சிறுகப்பட்டியிலும் மினி கிளினிக்கை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனை இரு கிராம மக்களும் ஏற்றுக்கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x