Published : 28 Dec 2020 03:50 PM
Last Updated : 28 Dec 2020 03:50 PM

ஓசூர் காப்புக் காட்டில் 10 குட்டி யானைகள் உட்பட 60 யானைகள் முகாம்: கிராம மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக் காட்டில் 10 குட்டி யானைகளுடன் சுமார் 60 யானைகள் முகாமிட்டுள்ளதால், மாவட்ட வனத்துறை சார்பில் 7 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வனத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி, ஜவளகிரி ஆகிய 7 வனச்சரகங்கள் அடங்கி உள்ளன. இந்த வனச்சரகங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் பிரதான உணவாகக் கேழ்வரகு உள்ளதால் இப்பகுதியில் தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மானாவாரியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் கேழ்வரகு அறுவடைக் காலத்தில், வனத்தில் உள்ள யானைகள் கேழ்வரகைச் சாப்பிடக் கூட்டம் கூட்டமாகக் கிராமங்களை நோக்கிப் படையெடுப்பது வழக்கமான நிகழ்வாகும்.

தற்போது ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள கிராமங்களில் கேழ்வரகு அறுவடை செய்யப்பட்டு வயலில் குவித்து வைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கேழ்வரகைச் சாப்பிட காப்புக்காட்டில் உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சரக கிராமங்களுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வகையில் கடந்த சில நாட்களாக ராயக்கோட்டை வனச்சரகம் ஊடேதுர்கம் காப்புக்காடு பகுதிகளில் 40 யானைகளும், அதேபோல தேன்கனிக்கோட்டை நொகனூர் காப்புக்காட்டில் 20 யானைகள் முகாமிட்டிருந்தன. இரண்டு குழுவாக முகாமிட்டிருந்த யானைகள், தற்போது ஒரே கூட்டமாக இணைந்துள்ளன.

10 குட்டி யானைகளுடன் உள்ள இந்த 60 யானைகளும் நேற்று நாகமங்கலம் கிராமம் அருகே கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையைக் கடந்து ஓசூர் வனச்சரகம் சானமாவு காப்புக் காட்டுக்கு வந்தன. இந்த யானைகளின் கூட்டத்தை ஜவளகிரி வனச்சரகக் காப்புக் காட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓசூர் வனச்சரக பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வனச்சரகர் ரவி கூறும்போது, ’’ஊடேதுர்கம் காப்புக்காடு மற்றும் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் முகாமிட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட யானைகளின் கூட்டம் நேற்று அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து இடம் பெயர்ந்து நாகமங்கலம் கிராமம் வழியாக ஓசூர் வனச்சரகத்தில் உள்ள சானமாவு காப்புக்காட்டில் முகாமிட்டுள்ளன. இதில் 10 குட்டி யானைகள் உள்ளன. இந்த யானைகளின் கண்காணிப்புப் பணிக்காக மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில் 45 பேர் இடம் பெற்ற 7 சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உதவி வனப்பாதுகாவலர் கார்த்திகேயிணி தலைமையில் ஒரு குழுவும், ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையில் ஒரு குழுவும், வனக்காப்பாளர்கள், சக்திவேல் மற்றும் நரசிம்மன் ஆகியோர் தலைமையில் 2 குழுவும், வனவர்கள் தலைமையில் 3 குழுக்களும் என மொத்தம் 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வனத்தில் இருந்து யானைகளின் கூட்டம் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஓசூர் வனச்சரகத்தில் 60 யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது குறித்து வனத்தை ஒட்டியுள்ள பீர்ஜேப்பள்ளி, சானமாவு, பாத்தக்கோட்டா, குந்தட்டி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலிப்பெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் கால்நடை மேய்ச்சல், விறகு சேகரிப்பு, இரவு நேரக் காவல் பணி ஆகியவற்றில் ஈடுபடுவதை கிராம மக்கள் தவிர்க்க வேண்டும்’’ என்று வனச்சரகர் ரவி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x