Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM

தொடர் விடுமுறையைக் கொண்டாட உதகையில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகள் திரண்டுள்ளனர். 8 மாதங்களுக்கு பின்னர் உதகை களைகட்டியுள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கேரளா, கர்நாடகா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருவதால், மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் திரண்ட சுற்றுலாப் பயணிகள், பெரணி இல்லம், கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்கள், பல்வேறு வகையான கள்ளிச் செடிகளை கண்டு ரசித்தனர். பின்னர் அலங்கார மற்றும் மலர்ச் செடிகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த 24-ல் 3,329, 25-ல் 6,713, 26-ல் 9,849 பேர், நேற்று மாலை வரை 10 ஆயிரம் பேர் என உதகை தாவரவியல் பூங்காவுக்கு மொத்தம்30 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

உதகை படகு இல்லத்தில் நீண்டவரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்திருந்து மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டார் படகுகளில் பாதுகாப்பு கவச உடை அணிந்து சவாரி செய்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் குதிரைசவாரி இல்லாததால் ஏமாற்றமடைந்தனர். இதேபோல ஷூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், தங்களது வாகனங்களை உதகை-கூடலூர் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை ஓரங்களில் நிறுத்திச்சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புத்தாண்டு வர உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீசன் இல்லாமலேயே உதகை களை கட்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x