Last Updated : 26 Dec, 2020 05:32 PM

 

Published : 26 Dec 2020 05:32 PM
Last Updated : 26 Dec 2020 05:32 PM

தூத்துக்குடியில் 'ஃபிட் இந்தியா' விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்: மாநகராட்சி ஆணையர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்பு

தூத்துக்குடியில் 'உடலுறுதி இந்தியா' (ஃபிட் இந்தியா) விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர், கூடுதல் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சுமார் 20 கி.மீ., தொலைவுக்கு மிதிவண்டி ஓட்டினர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் இருசக்கர வாகனங்களினால் ஏற்படும் மாசுவை தவிர்க்கும் வகையிலும், மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், மத்திய விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்தின் 'உடலுறுதி இந்தியா (Fit India) விழிப்புணர்வு டிசம்பர் - 2020' என்ற திட்டத்தின் மூலம் அனைத்து ஸ்மார்ட் சிட்டி நகரங்களிலும் பொதுமக்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் 'உடலுறுதி இந்தியா மீதிவண்டி ஓட்டம்' நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதி இந்திய விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பூங்காவில் இருந்து இந்த மிதிவண்டி ஓட்டத்தை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்து, தானும் ஓட்டத்தில் பங்கேற்றார். இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி பொறியாளர் சேர்மக்கனி, நகர்நல அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என சுமார் 100 பேர் இந்த விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டத்தில் பங்கேற்றனர்.

ரோச் பூங்காவில் தொடங்கி தெற்கு கடற்கரை சாலை, துறைமுக புறவழிச்சாலை, தெர்மல் டவுண்டானா வழியாக துறைமுகம் அருகேயுள்ள முயல்தீவு வரை சென்று, அதை பாதையில் திரும்பி ரோச் பூங்காவிலேயே நிறைவடையும் வகையில் சுமார் 20 கி.மீ., தொலைவுக்கு இந்த விழிப்புணர்வு மிதிவண்டி ஓட்டம் நடைபெற்றது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறும்போது, மிதிவண்டி ஒட்டுவது மூலம் காற்று மாசு குறைவதற்கும், சுற்றுப்புற நட்புச் சூழலை உருவாக்கவும், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான போக்குவரத்து முறையை உருவாக்கவும் முடியும். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த மிதிவண்டி ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இந்த மிதிவண்டி ஓட்டம் பொதுமக்கள் தங்களது உடலுறுதியை சுயமதிப்பீடு செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x