தஞ்சாவூர் அருகே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 200 ஆண்டுகளாக இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வரும் கிராம மக்கள்

கொல்லாங்கரை கிராத்தில் நேற்று இரவு நடைபெற்ற ருக்மாங்கதன் சரித்திர நாடகம்.
கொல்லாங்கரை கிராத்தில் நேற்று இரவு நடைபெற்ற ருக்மாங்கதன் சரித்திர நாடகம்.
Updated on
2 min read

வைகுண்ட ஏகாதசியின்போது, கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர் ஒரு கிராமத்தினர்.

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்துகொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம்.

இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவைப் பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், வைகுண்ட ஏகாதசி இரவு கண்விழித்து மறுநாள் துவாதசி அன்று விரதம் முடித்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ருக்மாங்கதன் மன்னர் ஆட்சிக் காலத்தில் குடிமக்கள் அனைவரும் மோட்சம் அடைந்தார்கள் என்ற வரலாற்று நாடகம்தான் ருக்மாங்கதன் சரித்திர நாடகம் கூறும் செய்தியாகும்.

அதன்படி, தஞ்சாவூர் அருகே உள்ள கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின்போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான ராமாயணம், வள்ளித் திருமணம், சத்தியவான் சாவித்ரி, ருக்மாங்கதன் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நாடகங்களுக்குத் தேவையான கதாபாத்திரங்களுக்குரிய கலைஞர்களாக, கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே தேர்வு செய்து நடிக்கின்றனர்.

வெள்ளித்திரை, சின்னத்திரை ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலத்திலும், சரித்திர நாடகங்களை இந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசியின் முதல் நாளும், மறுநாளும் என மூன்று நாட்களுக்கும் இந்த நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஏகாதசி நாளான நேற்று இரவு (டிச.25) ருக்மாங்கதன் சரித்திர நாடகம் நடைபெற்றது. இதில், கிராம மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள பிற கிராம மக்களும் கலந்துகொண்டு நாடகத்தினைப் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து, கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் கூறுகையில், "எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் முதல் தேதியிலேயே நாடகப் பயிற்சியைத் தொடங்கி விடுவோம். இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதைக் கனவாகக் கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள்தான் நடித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களைப் பார்த்து, ரசித்து வருகின்றனர். இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதைப் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறோம்.

நாடகம் நடத்த ஏழு தினங்களுக்கு முன் பந்தக்கால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கிவிடும். நாடகக் கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம்.

நாடகத்துக்குத் தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்துப் பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்குத் தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும்.

நாங்கள் எல்லோரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்துதான், அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம். பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்குச் சென்று சித்திரைத் தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள் சுமார் 100 பேராவது சென்று பாட்டுப்பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in