Published : 26 Dec 2020 02:27 PM
Last Updated : 26 Dec 2020 02:27 PM

முதல்வர் வேட்பாளர் கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் மவுனம் சம்மதத்துக்கு சமம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காட்டிய மவுனத்துக்கு சம்மதம் என்றே அர்த்தம் என கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுக தலைமையிலான கூட்டணி என்று சொல்லித்தான் தேர்தலை சந்தித்தோம். தற்போது வருவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்.

தற்போதய முதல்வர் தான் முதல்வர் வேட்பாளர் என்ற இலக்கோடு தேர்தலை சந்திக்கிறோம். ஊடகத்தினர் கேள்விக்கு அவர் அமைதியாகச் சென்றார் என்றால், நாங்களும் எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம்.

இங்குள்ள பாஜக நிர்வாகிகள் சொல்லும் கருத்துகள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

கரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. திமுகவினருக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல்வர் தலைமையில் நடந்த கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி ஒன்றியத்தின் வாயிலாக நடத்த வேண்டும். இவர்கள் சட்டத்தை மீறுகின்றனர். திமுகவினரை போன்று ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் நடத்தினால் ஊரின் ஒற்றுமை என்ன ஆகும்.

இவர்கள் அதிமுகவை புறக்கணிப்போம் என தீர்மானம் போடுகின்றனர். இதே போல், அனைத்து கிராமங்களிலும் திமுகவை விரட்டியடிப்போம் என நாங்கள் தீர்மானம் நிறைவேற்ற எவ்வளவு நேரமாகும்.

ஆனால், தமிழகம் அமைதி பூங்காவாக, சட்ட ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். திமுகவினர் பதவி வெறியில் உள்ளனர். அந்த வெறிதான் இது போன்ற கூட்டங்களை நடத்தச் செய்கிறது.

கிராம சபை கூட்டங்களை நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும். அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

ஊராட்சி மன்றத் தலைவரை வைத்து நடத்துவதுதான் கிராம சபை கூட்டம். இவர்கள் கட்சியினரை வைத்து நடத்தினால் தோல்வியை தான் காண்பார்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x