Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM
சிறப்பாக கட்சிப் பணியாற்றிய 5 பேருக்கு பாமக செயல்வீரர் விருதுகள் வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பாமகவின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்று பவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ‘சிறந்த செயல்வீரர்கள் விருது’ வழங்க கட்சி முடிவு செய்துள்ளது. இனி ஆண்டுதோறும் மொத்தம் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
அதன்படி, 2020-ம் ஆண்டுக்கான பாமகவின் சிறந்த செயல்வீரர் விருதுகளை பெறுவதற்காக சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச.சிவப்பிரகாசம், பாமக அமைப்புச் செயலாளர் மீ.கா.செல்வகுமார், பாமக மாநில துணைத் தலைவர் திருத்துறைப்பூண்டி டிஎஸ்ஆர்எம் சுப்பிரமணிய அய்யர், பாமக மகளிர் அணி மாநில செயலாளர் நிர்மலா ராசா, பாமக இளைஞர் அணி மாநில செயலாளர் பி.வி.செந்தில் ஆகிய 5 பேர் ராமதாஸால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்டவற்றை அளவீடு செய்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு பவுன் தங்கக் காசு கொண்டதாக இருக்கும்.
வரும் 31-ம் தேதி நடக்கவுள்ள ‘2020-ம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2021-ம் ஆண்டை வரவேற்போம்’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படும். 2021-ல் பாமக செயல்வீரர் விருதுகளை பெறுவதற்காக அனைத்து நிலை நிர்வாகிகளும் கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT