Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த் உறுதி

சென்னை

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக இருக்கும் கூட்டணி வெற்றி பெறும். 234 தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக சார்பில் சென்னை மதுரவாயலில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று, அனைவருக்கும் கேக், பிரியாணி, வேட்டி, சேலைகளை வழங்கினார். தொடர்ந்து, போரூரில் உள்ள தேவாலயத்தில் பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான் பண்டிகைகளின்போது மத நல்லிணக்க அடிப்படையில் தேமுதிக பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

நடிகராக இருந்த காலம் முதல் இன்று வரை எம்ஜிஆரை குருவாக ஏற்றவர் விஜயகாந்த். அவர் எப்போதுமே தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டது இல்லை. எம்ஜிஆர் போல விஜயகாந்தும் மக்களுக்கு உதவுபவர் என்பதால் மக்களும், தொண்டர்களும் சூட்டிய பட்டம் அது. எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு கடந்த 25 ஆண்டுகளாக உதவி செய்துவருவது விஜயகாந்த் மட்டுமே. எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவோர் இதுவரை என்ன செய்தார்கள்.

சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். மக்களுக்காக பணியாற்றும் மகத்தான வாய்ப்பு வரும் 2021-ம் ஆண்டில் தேமுதிக மற்றும் எங்கள் கூட்டணிக்கு அமையும். தேர்தலுக்கு தேமுதிக தயாராக இருக்கிறது. பிரச்சாரத்தை தொடங்கவும் தயாராக உள்ளோம். 234 தொகுதிகளுக்கும் விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வுகளில் தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x