Published : 25 Dec 2020 06:31 PM
Last Updated : 25 Dec 2020 06:31 PM

கிராம சபைக் கூட்டத்தின் பெயரை மாற்றுவதால் எங்களின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: துரைமுருகன் கருத்து

'சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும்' என்பது போல கிராம சபைக் கூட்டத்தின் பெயரை மாற்றுவதால் எங்கள் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியாது என்று, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலம் சேதமடைந்துள்ளது. இதையடுத்து, பொதுப்பணித் துறை சார்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (டிச. 25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கிராம சபை கூட்டம் என்கின்ற அந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்ற அதிகாரமும் சட்டமும் இல்லை. கடந்த இரண்டு நாட்களாக திமுக நடத்திவரும் கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்ட பொதுமக்களைப் பார்த்து அதிமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்று நினைத்து கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது என்று தடை போட்டுள்ளனர்.

அதனால், 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டம் நடத்தப் போகிறோம். 'சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும்' என்பது போல பெயரை மாற்றுவதால் எங்கள் வெற்றியை யாரும் தடுத்துவிட முடியாது.

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்பதால் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் கட்சியின் பெயரை பேப்பரில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

அப்போது, மக்களவை திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் உடனிருந்தார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x