Last Updated : 25 Dec, 2020 01:54 PM

 

Published : 25 Dec 2020 01:54 PM
Last Updated : 25 Dec 2020 01:54 PM

புதுச்சேரியில் 38 ஆயிரத்தை நெருங்கும் கரோனா தொற்று; புதிதாக 29 பேர் பாதிப்பு: உயிரிழப்பு இல்லை

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று புதிதாக 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை. மொத்த பாதிப்பு 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (டிச. 25) தெரிவித்திருப்பதாவது:

"புதுச்சேரி மாநிலத்தில் 2,973 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், மாஹேவில் 7 பேருக்கும் என மொத்தம் 29 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 629 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 914 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களுள் மருத்துவமனைகளில் 158 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 191 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 349 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 936 (97.42 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 4 லட்சத்து 67 ஆயிரத்து 228 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 4 லட்சத்து 24 ஆயிரத்து 989 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x