Published : 14 Oct 2015 09:22 AM
Last Updated : 14 Oct 2015 09:22 AM

அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?- விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் அரசு சம்பந்தப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை நிலுவையில் உள்ளன, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமேஷ் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘அரசு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஏராளமாக நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தை அவமதித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இதுபோன்ற மனுவை ஏற்கெனவே தாக்கல் செய்தபோது உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு களில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை குறிப்பிட்ட காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் அல்லது அதன் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து துறைகளுக்கும் அரசு தலைமை செயலாளர் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்’ என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படுவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், மேற்கண்ட உத்தரவு பிறப்பித்து ஓராண்டு ஆகியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஏராளமாக நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தை அவமதிக்கும் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார். தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பிய பிறகு இதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிய விரும்புகிறோம். சுற்றறிக்கை அனுப்பிய தேதி வரை எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதன்பிறகு எத்தனை அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதில் எத்தனை வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் எத்தனை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அட்டவணை வடிவத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை என்ற விவரங்களை உயர் நீதிமன்றப் பதிவாளர் பெற வேண்டும். அவ்வாறு பெற்றால்தான் அவற்றை சரிபார்க்க முடியும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் எத்தனை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை அட்டவணை வடிவத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x