Published : 24 Oct 2015 07:42 AM
Last Updated : 24 Oct 2015 07:42 AM

வடகிழக்கு பருவமழை 28-ல் தொடங்க வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை வரும் 28-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும், தெற்கு அந்தமான் கடலிலும், தென்கிழக்கு அரபிக் கடலிலும் காற்று மேல் அடுக்கு சுழற்சிகள் உருவாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சிகள் ஒன்றை ஒன்று பாதித்து வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடற்கரையை ஒட்டிய பகுதியில் உருவாகியுள்ள காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் 8 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.

அக்டோபர் 26-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். வரும் 27-ம் தேதி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக மழைபெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x