Last Updated : 24 Dec, 2020 07:47 PM

 

Published : 24 Dec 2020 07:47 PM
Last Updated : 24 Dec 2020 07:47 PM

ஆக்கிரமிப்புகளைத் தடுக்க தாலுகா அளவில் அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்புகளை தடுக்க தாலுகாவில் அளவில் அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை பீ.பீ.குளம் நேதாஜி மெயின்ரோடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர் பிடிப்பு பகுதியில் 5 ஆயிரம் குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றன. இங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் குடியிருப்பவர்களுக்கு ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியன அரசால் வழங்கப்பட்டுள்ளது.

பட்டா கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இந்நிலையில் அந்த இடத்தை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எங்களுக்கு வேறு இடம் இல்லை. எனவே எங்களை வெளியேற்றக்கூடாது என்றும், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கைக்காக பலரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்திருந்தால் ஆக்கிரமிப்புகளை தடுத்திருக்கலாம். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தகுதியானவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட இடத்தை 4 மாதத்தில் காலிசெய்வதாக குடியிருப்போர் உத்தரவாத பத்திரம் வழங்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காதவர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை தடுக்க தாலுகா அளவில் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x