Last Updated : 24 Dec, 2020 04:03 PM

 

Published : 24 Dec 2020 04:03 PM
Last Updated : 24 Dec 2020 04:03 PM

திருப்பத்தூரில் ரூ.60 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள்; வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் இன்று (டிச. 24) வந்தார். அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வரவேற்றார். இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுப்பணிகளை ஐஜி நாகராஜன் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

"கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சைபர் க்ரைம், லஞ்ச ஒழிப்புத்துறை, தகவல் தொழில்நுட்பப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், 6 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் குற்றச்செயல்களில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், பழைய குற்றவாளிகள், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 300 கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக ரூ.60 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மாதனூர், சின்ன கந்திலி, தோரணம்பதி மற்றும் லட்சுமிபுரம் ஆகிய 4 சோதனைச்சாவடிகளில் 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அதன் கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவையான இடங்களில் சிக்னல்கள் பொருத்தப்படும். தானியங்கி சிக்னல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்ட ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டுமானப்பணிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன. விரைவில் பூமி பூஜையுடன் கட்டிடப்பணிகள் தொடங்கும்.

பெண்கள் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வுகள் காவல் துறை மூலம் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வுகள் காவல் துறை சார்பில் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஐஜி நாகராஜன் ஆய்வின்போது திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு, எஸ்.பி. காவல் ஆய்வாளர் பழனி, காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x