Last Updated : 24 Dec, 2020 12:03 PM

 

Published : 24 Dec 2020 12:03 PM
Last Updated : 24 Dec 2020 12:03 PM

திமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. உடன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாக, அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

பெரியாரின் நினைவு நாளையொட்டி கோவை சுந்தராபுரம் அருகே குறிச்சி பகுதியில் அமைந்துள்ள பெரியாரின் உருவ சிலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி இன்று (டிச. 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு ஏற்ப வரும் ஜனவரி 10-ம் தேதி வரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். எனவே, அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள பல்வேறு ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று வருகிறோம். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அறிக்கையாக அளித்துள்ளோம்.

அமைச்சர்களின் ஊழல்களை விவரித்து திமுகவினர் வீடு, வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ளனர். திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஆட்சி மாற்றத்திற்கான அடையாளம் தெரிகிறது" என்றார்.

இந்த நிகழ்வில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x