Published : 24 Dec 2020 11:04 AM
Last Updated : 24 Dec 2020 11:04 AM

குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ்

சென்னை

தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டமான திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று முன் தினம் (22-ம் தேதி) தெரிவித்தார். இதன்படி வீடுகளுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரையும், திருமண மண்டபங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் குப்பை கொட்டும் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படாவிட்டால், திமுக ஆட்சி அமைந்தவுடன், குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின்றிவித்தார்.

இந்நிலையில், குப்பைக்கு வரி வசூல் செய்யும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (டிச.24) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 இயற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டும். அதனடிப்படையில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர்களின் பயனாளர் கட்டணம் சொத்து வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு நலச் சங்க பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுகிறது என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x