Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM

வரும் ஜன.19-ம் தேதி வரை வாரம் ஒருமுறை சந்திக்க அனுமதி: சிறையில் உள்ள பேரறிவாளனை சந்தித்தார் அற்புதம்மாள்

சிறையில் உள்ள பேரறிவாளனை வரும் ஜன.19-ம் தேதி வரை வாரம் ஒருமுறை அவரது தாயார் சந்திக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், நேற்றுகாலை அற்புதம்மாள் பேரறிவாளனை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்து, பின்னர் கடந்த டிச.7-ம் தேதி மீண்டும் சிறைக்கு சென்றார்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரறிவாளனை சந்திக்க அவரது தாயார் அற்புதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சரவணன் ஆஜராகி, சிறைத்துறை நிர்வாகம் பேரறிவாளனை சந்திக்க வழக்கறிஞர்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என குற்றஞ்சாட்டினார்.

அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.பிரதாப்குமார் ஆஜராகி, பேரறிவாளனின் வழக்கறிஞர்கள் எனக்கூறிக்கொண்டு கும்பலாக சந்திக்க அனுமதி கோருகின்றனர் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், கரோனா காலகட்டமாக உள்ளதால் பேரறிவாளனின் நண்பர்கள், உறவினர்கள் அவரை காணொளி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர்களைப் பொருத்தமட்டில் சிறை நிர்வாகம் யாரை அனுமதிக்கிறதோ அவர்கள் மட்டும் சந்திக்கலாம். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை பொருத்தவரை அவர் தனக்கு கரோனா தொற்று இல்லை என்பதை பரிசோதித்து மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்தால் வரும் ஜன.19-ம் தேதி வரை அவர் வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க சிறைத்துறை அனுமதிக்க வேண் டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று காலை அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்து வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x