Published : 23 Dec 2020 09:05 PM
Last Updated : 23 Dec 2020 09:05 PM

பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனைக்கு இளையராஜா ஒப்புதல்: ஒரு நாள் தியானம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், பொருட்களை எடுக்கவும் அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இடத்தை காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தானே எழுதிய இசை கோர்ப்புகள், தனக்கு சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை அனுமதிக்கக் கடும் ஆட்சேபம் தெரிவித்த பிரசாத் ஸ்டுடியோ தரப்பு, பின்னர் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க ஒப்புதல் தெரிவித்தது. இளையராஜா ஏற்றுக்கொண்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிரசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளின்படி, கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும், இடத்திற்கு உரிமை கோர மாட்டேன் என்றும் இளையராஜாவின் தரப்பில் மெமோ தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பிரமாண பத்திரமாக இல்லாமல் மெமோவாக மட்டுமே தாக்கல் செய்துள்ளதாக பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இளையராஜா தரப்பில் ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்து கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கும் தான் எப்போதும் வார்த்தை தவறியதில்லை என்றும், கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியதில்லை என்றும் இளையராஜா தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் இளையராஜா தரப்பு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சதீஷ்குமார் ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டாம் இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதித்துள்ளார்.

உள்ளே சென்றுவரும் நடைமுறைகளுக்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆணையராக வி.லட்சுமிநாராயணன் என்பவரை நியமித்து உத்தரவிட்டத்துடன், பொருட்களை எடுக்கும் தேதி குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் பேசி முடிவு செய்யவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

பொருட்களை எடுக்க இளையராஜா வரும் நாளன்று காவல்துறை பாதுகாப்பு வேண்டுமென பிரசாத் ஸ்டுடியோ கோரிக்கை வைத்திருந்ததால், உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x