

வளரும் நாடுகளில் கரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருவதால் தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாகச் சத்துவாச்சாரி, சித்தேரி, அணைக்கட்டு உள்ளிட்ட 7 இடங்களில் கடந்த வாரம் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை, வண்டறந்தாங்கல், செஞ்சி, குடியாத்தம் காந்தி நகர் உள்ளிட்ட 4 இடங்களில் மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''மினி கிளினிக் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 106 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் முதல்கட்டமாக வேலூர் மாவட்டத்தில் 11, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 என மொத்தம் 35 இடங்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 6 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர்.
கரோனா காலத்திலும் தமிழக அரசு திறம்படச் செயலாற்றி, மற்ற மாநில அரசுகளுக்கு முன் உதாரணமாக விளங்குகிறது. மினி கிளினிக் திறப்புத் திட்டத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர் அரசு மீது வீண் பழி சுமத்துகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தையும் நடத்தி வருகின்றனர். அனைத்தையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினருக்குத் தமிழக மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.
வளரும் நாடுகளில் தற்போது கரோனா தொற்று புதிய வடிவில் பரவ தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் விழிப்புடனும், கவனமுடனும் இருக்க வேண்டும். அரசு கூறிய வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்'' என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் மினி கிளினிக்கை அமைச்சர் கே.சி.வீரமணி இன்று திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உட்படப் பலர் உள்ளனர்.