Last Updated : 23 Dec, 2020 06:15 PM

 

Published : 23 Dec 2020 06:15 PM
Last Updated : 23 Dec 2020 06:15 PM

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடத்தத் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு அனுமதி வழங்குக: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு 3 மாதத்தில் அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மேலபனையூரைச் சேர்ந்த கரு.ராஜேந்திரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''புதுக்கோட்டை மாவட்டத்தில் 160-க்கும் அதிகமாக இடங்களில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் உள்ளன. மத்தியத் தொல்லியல் நினைவுச் சின்னங்கள் 420-ல் 109 நினைவுச் சின்னங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

இங்கு பொற்பனைகோட்டையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோட்டை உள்ளது. 20 அடி உயரம் கொண்ட இந்தக் கோட்டை 40 அடி கடினத்தன்மை கொண்டது. சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த கற்களைக் கொண்டு கோட்டை கட்டப்பட்டுள்ளது.

இந்த கோட்டையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். எனவே, 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள பொற்பனைக்கோட்டையைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

இதுகுறித்து அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு மேற்கொள்ளத் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். அந்த மனுவின் அடிப்படையில், பொற்பனைக்கோட்டையில் அழகாய்வு நடத்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்குத் தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது'' என்றார்.

இதையடுத்து, ''பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடத்த அனுமதி கேட்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அனுப்பிய மனு மீது மார்ச் 31-ம் தேதி க்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x