Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
மதுராந்தகம் அருகே பழையனூர் சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் விவேக் (27). தனியார் மருந்து நிறுவன ஊழியரான இவர், தனது தந்தையின் மருத்துவ செலவுக்காக ‘கெட் ருபி டாட் காம்’ என்ற கடன் வழங்கும் செயலி மூலம் ரூ.4 ஆயிரம் ஆன்லைனில் கடன் பெற்றுள்ளர்.
கடன் வாங்கி ஓரிரு நாட்களில்வட்டியுடன் ரூ.4 ஆயிரத்து 305-ஐதிருப்பி செலுத்த ஆன்லைன் நிறுவனம் நெருக்கடி கொடுத்துள்ளது. இதையடுத்து விவேக்கை தொடர்புகொண்டு, “கடனை செலுத்தவில்லை எனில் நீங்கள் கடன் வாங்கிய விவரத்தை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி உங்களை அவமானப்படுத்துவோம்” என மிரட்டியுள்ளனர்.
குறிப்பிட்ட தேதியில் விவேக் கடனை திருப்பி செலுத்தாததால் விவேக் கடன் வாங்கிய விவரத்தை குறுஞ்செய்தியாக அவருடைய நண்பர்களுக்கு ‘கெட் ருபி டாட் காம்’ நிறுவனம் அனுப்பியுள்ளது. இதைப் பார்த்த அவரது நண்பர்கள் விவேக்குக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விவேக் கிணற்றில் குதித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மிரட்டிய ‘கெட் ருபி டாட் காம்’ நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என விவேக்கின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளதாவது: “கடன் கொடுக்கும் செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய் யும்போதே, நமது செல்போனில் இருக்கும் தொடர்பு எண்கள், புகைப்படம், வீடியோ கேலரிகளை இந்த செயலிகள் கண்காணிக்க அனுமதி கொடுத்துவிடுவோம். இதனால் நமது செல்போனில் உள்ள சுய விவரங்களை செயலி நிறுவனங்கள் திருடிவிடுகின்றன.
நாம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க தாமதமானால், நமது தொடர்பு எண் பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் நம்கடன் விவரங்களை கூறி அவமானப்படுத்துகின்றனர்.
இதைத் தொடர்ந்து நமது செல்போனில் இருக்கும் தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து ஆபாச மிரட்டல்களையும் விடுக்கின்றனர். இந்த செல்போன் செயலிகளை சட்டவிரோதமாக கருதி அரசு தடை செய்ய வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT