

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ள திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர் களைச் சந்தித்த உதயநிதி கூறியது: தமிழக மக்கள் ஆட்சி மாற்றத் திற்கு தயாராகி வருகிறார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகஆட்சி அகற்றப்படும். அதிமுகவும் பாஜகவும் ஒரே கட்சிதான்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அடித்த கொள்ளை பணத்தில் இருந்து, வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என அதிமுகவினர் எண்ணுகின்றனர். அது நடக்காது. .
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கட்டணக் குறைப்பு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், எம்எல்ஏ சரவணன், சிதம்பரம் நகர செயலாளர்செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே பொறியியல் கல்லூரி சேர்மன் கதிரவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து உதயநிதி புவனகிரி, சேத்தியாத்தோப்பில் மக்களிடையே பேசினார். அதனைத் தொடர்ந்து கந்தகுமாரன் பகுதியில் வீராணம் ஏரியை பார்வையிட்டார். தெடர்ந்து லால்பேட்டையில் பேசினார். காட்டுமன்னார்கோவில் அருகே மேவூரில் உள்ள முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் எம்ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.