தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக்கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரிய வழக்கில் சுகாதாரத்துறைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த அஞ்சலை, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

என் கணவரை கரோனா சிகிச்சைக்காக நவ. 7-ல் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முன்பனமாக ரூ.50,000 செலுத்தினோம்.

2 நாட்கள் கழித்து ரூ.2,20,000 கட்ட சொன்னார்கள். இதனால் கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் என் கணவருக்கு கரோனா தொற்று இல்லை என்றார்கள். இருப்பினும் நெஞ்சுவலி ஏற்பட்டு நவ. 28-ல் கணவர் உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் கரோனா தொற்று பரிசோதனைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

எனவே கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்த தொகையை தனியார் மருத்துவமனை வசூலிப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in