நீதிமன்ற புறக்கணிப்பின் போது பணிக்குச் சென்ற வழக்கறிஞர் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நீதிமன்ற புறக்கணிப்பின் போது பணிக்குச் சென்ற வழக்கறிஞர் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
Updated on
1 min read

நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தின் போது நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞரை சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் டிச. 8-ல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. அன்று வழக்கறிஞர் சிவக்குமார் என்பவர் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜரானார்.

இதனால் அவர் வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

வழக்கறிஞர் தொழில் புனிதமானது. வழக்கறிஞர்கள் தொழிற்சங்கத்தினரை போல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தற்போது வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிக்கு இடையூறாக நடந்து கொள்கின்றனர். சில வழக்கறிஞர் சங்கங்கள் அரசியல், சாதிப் பிரச்சினைகளுக்குக் கூட போராட்டம் நடத்துகின்றனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கறிஞர்களின் போராட்டம் சட்ட விரோதமானது. மனுதாரர் தனது கட்சிக்காரருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

எனவே, வழக்கறிஞர் சங்கத்தில் இருந்து மனுதாரர் நீக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு பார் கவுன்சில் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை ஜன. 18-க்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in