செகந்திராபாத்தில் மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுவனின் இதயம் தானம்: சென்னையில் 8 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது

செகந்திராபாத்தில் மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுவனின் இதயம் தானம்: சென்னையில் 8 வயது சிறுவனுக்கு பொருத்தப்பட்டது
Updated on
1 min read

செகந்திராபாத்தில் மூளைச்சாவு அடைந்த 15 வயது சிறுவனின் இதயம், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநிலத்தின் 8 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த சிறுவன் கிருஷ்ணா (15). 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 1-ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிறுவனின் தலையில் பலத்த காயம் எற்பட்டது. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அந்த சிறுவன் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக டாக்டர்களிடம் பெற்றோர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் எடுக்கப்பட்டு, தெலங்கானா மாநில மருத்துவமனைகளில் உடல் உறுப்பு வேண்டி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதயம் மட்டும் அங்கிருந்த யாருக்கும் பொருந்தவில்லை.

இந்த தகவலை கேள்விப்பட்ட அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை டாக்டர்கள், தங்களுடைய மருத்துவமனையில் மாற்று இதயம் வேண்டி சிகிச்சை பெற்று வரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு அந்த இதயத்தை பொருத்த முடிவு செய்தனர். அதன்படி சென்னையில் இருந்து டாக்டர்கள் குழுவினர் செகந்திராபாத் சென்று இதயத்தை பெற்றுக்கொண்டு சிறப்பு விமானம் மூலம் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் சென்னை வந்தனர்.

விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழுவினர் தானமாக கிடைத்த இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் 8 வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தினர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கு வசதியாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்க தேவையான வசதிகளை போலீஸார் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in