Published : 21 Dec 2020 09:22 PM
Last Updated : 21 Dec 2020 09:22 PM

1989 முதல் அரசுப்பணியில் தேர்வானவர்கள் சமூக விவரங்களை அளிக்க டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிடக் கோரி ராமதாஸ் வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி 

சென்னை

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், “வன்னிய சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி 1987-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின், 1989-ம் ஆண்டு 107 சாதியினரைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த 1989-ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை, ஆண்டுவாரியாக, வகுப்பு வாரியாக, ஜாதி வாரியாக வழங்க வேண்டும். குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 வது பிரிவுகளில் உள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை வழங்க கோரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தோம், ஆனால் அந்த விவரங்கள் தனித்தனியாக தொகுத்து பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுத்து விட்டது.

இந்த விவரங்களை வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி மீண்டும் விண்ணப்பித்துள்ளதால், எங்களது விண்ணப்பத்தை பரிசீலித்து, இந்த விவரங்களை வழங்க உத்தரவிட வேண்டும்”. எனக் கோரியுள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு , “இந்த விவரங்களை வெளியிடுவதால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் எனக் கூற எந்த அடிப்படையும் இல்லை என உயர் நீதிமன்றம் 2010-ல் பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது”. என வாதிட்டார்.

இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்த சமூகத்திற்கும் கல்வி பெறுவதற்கு எந்த தடையும் இல்லை. நல்ல தரமான கல்வி நிறுவனங்களை மனுதாரர் துவங்க வேண்டும். மனுதாரர் கேட்கும் விவரங்களை பெற்ற பின் போராட்டங்கள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என கேள்வி எழுப்பினர்.

ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்த எந்த தடையும் இல்லை, ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது. தொண்டர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு கட்சி தலைவர்களுக்கு உள்ளது. என சுட்டிக்காட்டினர்.

தகவல் உரிமைச் சட்டத்தில் மேலும் மாற்று வழிகள் உள்ளதால், தற்போதைய நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x