Published : 21 Dec 2020 08:18 PM
Last Updated : 21 Dec 2020 08:18 PM

புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை; கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை: தமிழக அரசு உத்தரவு

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடுவதை தடுக்க சென்னை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்கள் முக்கிய பகுதிகள், ரெஸ்டாரண்டுகள், கேளிக்கை விடுதிகளில் நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இரவு ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு என்றாலே டிச.31 அன்று இரவு 8-மணி முதலே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொண்டாட்டம் களைகட்டிவிடும். மோட்டார் சைக்கிள் சாலைகளில் பறக்கும், சென்னை முழுவதும் மதுவிருந்து, பைக் ரேஸ் போன்றவைகளும் நடக்கும். அன்று இரவு ஒரு 10 மணி நேரத்தை விபத்தில்லாமல் கடந்துவிட்டால் போதும் என போலீஸார் தவியாய் தவித்து போவார்கள்.

மறுபுறம் கடற்கரை சாலைகள், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, காமராஜர் சாலை, ஈசிஆர் சாலைகளில் கொண்டாட்டமாக பொதுமக்கள் கூடுவார்கள். சர்ச்சுகளில் பிரார்த்தனை இரவு முழுவதும் நடக்கும். ஆண்டுதோறும் கடற்கரை காந்தி சிலை அருகே மாநகர காவல் ஆணையர் பொதுமக்கள் புடைசூழ கேக் வெட்டி கொண்டாடுவார்.

இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக 8 மாதங்கள் முடங்கி போன பொதுமக்கள் தற்போதைய தளர்வுகள் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மதபேதமின்றி கொண்டாடும் புத்தாண்டை ஒட்டி பலரும் பல திட்டத்தில் இருந்தனர்.

ஆனால் கரோனா தொற்று வைரஸ் அடுத்து ஒரு கட்டத்தை நோக்கி செல்ல இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ நிபுணர்கள் ஆலோசனைப்படி இந்த ஆண்டு புத்தாண்டு நள்ளிரவு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் [restaurants, hotels, clubs, resorts (including beach resorts) and other similar places] டிச.31 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில், அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இதுவன்றி, 2021 ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, டிச. 31 அன்று இரவு முதல் அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் பொதுமக்கள் மிக அதிகமான அளவில் கூட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள, கரோனா நோய்த் தொற்றானது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில வெளிநாடுகளில் கரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இது போன்ற இதர இடங்களில் [restaurants, hotels, clubs, resorts (including beach resorts) and other similar places] உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். எனினும், 31.12.2020 அன்று இரவு நடத்தப்படும் 2021-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.

மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் 2021-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், 31.12.2020 மற்றும் 1.1.2021 ஆகிய நாட்களில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கரோனா நோய்த் தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x