சாலை ஆக்கிரமிப்பால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பஸ்கள் வர மறுப்பு: நோயாளிகள் அவதி

சாலை ஆக்கிரமிப்பால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பஸ்கள் வர மறுப்பு: நோயாளிகள் அவதி
Updated on
1 min read

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பஸ்களை இயக்க ஓட்டுநர்கள் வர மறுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

சிவகங்கையில் மானாமதுரை சாலை அருகே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உள்நோயாளிகளாக 800-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை மானாமதுரை சாலையில் இருந்து அரை கி.மீ., தொலைவில் உள்ளது.

இதனால் மருத்துவமனை வளாகம் அருகிலேயே தனியாக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு, அங்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் திருப்பி செல்லும் வகையில் இடவசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது பஸ் நிறுத்ததை ஆக்கிரமித்து சிலர் கடைகளை வைத்தும், வாகனங்களை நிறுத்திவிட்டும் செல்கின்றனர்.

இதனால் பஸ்களை ஓட்டுநர்களால் திருப்பி செல்வதில் சிரமம் உள்ளது. இதையடுத்து பஸ் ஓட்டுநர்கள் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்திற்கு வருவதற்கு மறுக்கின்றனர். தற்போது ஒரே ஒரு நகர பஸ் மட்டும் சிரமப்பட்டு வந்து செல்கிறது. மற்ற பஸ்களை இயக்காததால் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் குறுகிய இடம் தான் உள்ளது. அந்த இடத்தையும் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்தும், வாகனங்களை நிறுத்துவதால் பஸ்களை திருப்ப முடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பஸ்களை முழுமையாக இயக்க முடியும், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in