Last Updated : 21 Dec, 2020 04:24 PM

 

Published : 21 Dec 2020 04:24 PM
Last Updated : 21 Dec 2020 04:24 PM

ஜனவரியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரியில் சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்துவதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அறிவித்துள்ளார்.

மதுரையில் இது தொடர்பாக இன்று மாநிலத் தலைவர் ரா. சண்முகராஜன் செய்தியாளர்களிடம் கூறியது;

விருதுநகரில் நடந்த சங்க மத்திய செயற்குழுவில் புதிய பென்சன் திட்டம், அவுட்சோர்சிங் முறை ரத்து, சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றுதல், சித்திக்குழு அறிக்கை அமல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரோானா காலத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று தாக்கி இறந்தால் மட்டுமின்றி, முன்கள பணியில் ஈடுபட்டு இறந்தாலும், அவர்களின் குடும்பத்திற்கும் அரசு ரூ.50 லட்சம் வழங்கவேண்டும்.

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால், ஜன.,3-வது வாரம் சென்னையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளோம்.

அதற்கு முன்போ அல்லது பின்னரோ அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

2016ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் புதிய பென்சன் திட்டம் ரத்து குறித்த சாந்த ஷீலா தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை அளித்தும், 2 ஆண்டாக நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக தற்போதைய முதல்வரை இருமுறை சந்தித்து பேசியும் ஒன்று நடக்கவில்லை.

மத்திய அரசு ஓய்வூதியம் ஆணையம் மூலம் புதிய பென்சன் திட்டம் குறித்த முடிவை அந்தந்த மாநிலம் எடுக்கலாம் என்பது விதி. சமீபத்தில் மேற்கு வங்கம், திரிபுரா மாநிலம் இணைந்தது.

தமிழகத்தை பொறுத்த வரை 2004-ல் திட்டம் அறிமுகப்படுத்தினாலும், 1.4. 2003 முன் தேதியிட்டு, அமல்படுத்தப்பட்டது. இதுவரை தமிழகம் ஓய்வூதியம் ஆணையத்தில் சேரவில்லை.

தற்போது வரை அரசு ஊழியர்களிடம் பிடித்த தொகை ரூ.20 ஆயிரம் கோடி தமிழக அரசிட மே உள்ளது. இத்தொகை அரசு செலவழித்துவிட்டது. மத்திய அரசிடம் செலுத்தினால் மட்டுமே புதிய பென்சன் திட்டமே நடை முறைக்கு வரும்.

இது போன்ற சூழலில் ரூ.20 ஆயிரம் கோடியை செலுத்த வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 2003 முதல் 2020 வரை பணியில் சேர்ந்தவர்களை பழைய பென்சன் திட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டு, இனிமேல் பணியில் சேருவோருக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியம் கொண்டு வரலாம்.

தமிழக அரசு கடன் சுமையில் இருப்பதால் அரசே ரூ. 20 கோடியை பயன் படுத்தலாம் என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தாலும், முழு நிலைப்பாடு அதுவும் கூடாது என்பது தான். ஓய்வூதியம் அரசு வழங்கும் பிச்சை அல்ல. 35 ஆண்டு உழைத்தவர்களுக்கு வழங்கும் வட்டியாக கருதுகிறோம். திமுக ஆட்சியில் தான் அனைவருக்குமான ஓய்வூதியம் சமநிலையானது. தற்போது ஓய்வூதியமின்றி பணியில் அலட்சியம், தவறு நடக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில பொதுச் செயலர் சுருளிராஜ், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x