

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரும் சிக்காததால், இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் பலர் சேர்ந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருந்த மாணவரும் அவரது தந்தையும்தான் முதன்முதலில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடங்கிய விசாரணை நீண்டு கொண்டே போன நிலையில் இதுவரை 5 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஒரு இடைத்தரகர் என 12 பேர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்து வந்த நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீஸார் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி வெளியிட்டனர். அவர்களின் பெயர், முகவரி குறித்து விவரம் தெரிந்தால் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு செல்போன்எண்ணும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.
10 பேர் கைது
முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ரசீத் என்பவரையும் சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். ஆனால் இன்று வரை அந்த 10 பேரையும், இடைத்தரகர்களையும் சிபிசிஐடியால் கைது செய்ய முடியவில்லை.
பெங்களூரில் உள்ள ஆதார்ஆணையத்துக்கு 10 பேரின் புகைப்படங்களையும் சிபிசிஐடி போலீஸார் அனுப்பி, அவர்கள் குறித்த விவரங்களை கேட்டிருந்தனர். இந்நிலையில் 10 பேரின் புகைப்படங்கள் குறித்து ஆய்வு செய்ததில், அவர்கள் குறித்த எந்த விவரங்களும் கிடைக்கவில்லை என்று ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்கள் சிக்காததால் இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதி தேனி காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கு மாற்றப்பட்டது.
தற்போது, 2020-ம் ஆண்டு நீட் தேர்வே முடிந்து மாணவர் சேர்க்கையும் முடியும் நிலையில் உள்ளது. இதனால், ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் கிடப்பில் போட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.