

மத்திய அரசு அண்மையில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனம் எழுந்தது.
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும், விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி தமிழக பாஜகவினர் மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்படி செங்கல்பட்டு மாவட்ட பாஜக பொறுப்பாளரும், தாம்பரம் சட்டப் பேரவை அமைப்பாளருமான வேதா சுப்ரமணியம் மற்றும் கட்சியினர், தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பதுவஞ்சேரி கிராமங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் புதிய வேளாண் சட்டங்களை விளக்கினர். மேலும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் அவை முறையாக கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தனர்.
இதை தொடர்ந்து சிட்லபாக்கம் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினர்.