Last Updated : 20 Dec, 2020 11:37 AM

 

Published : 20 Dec 2020 11:37 AM
Last Updated : 20 Dec 2020 11:37 AM

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரைக் கைது செய்த இலங்கைக் கடற்படை

பிரதிநிதித்துவப் படம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

வங்கக்கடலில் அவ்வப்போது உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. இதனால், தொடர்ச்சியாக மீன்பிடிக்கச் செல்லாமல் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து நேற்று (டிச.19) 273 விசைப்படகுகளில் சுமார் ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அப்போது, 22 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் இன்று (டிச.20) அதிகாலை கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ஆர்.கான்ஸ்டன்ட் (42), கே.ரமேஷ் (38), பி.பாண்டு (50), என்.மோகன் (44) ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களது படகு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்து, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படைத் தளத்தில் விசாரணை செய்தனர்.

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது சக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x