Last Updated : 19 Dec, 2020 02:04 PM

 

Published : 19 Dec 2020 02:04 PM
Last Updated : 19 Dec 2020 02:04 PM

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மழைநீர் கசிவால் சி.டி.ஸ்கேன் செயல்பாடு நிறுத்தம்

அண்மையில் பெய்த கனமழையால், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக் கட்டிடத்தினுள் மழைநீர்க் கசிவு காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்து மின்னனு சி.டி.ஸ்கேன் எனும் நோய்காண் இயந்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 140 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் வகையில் கடந்த ஓராண்டுக்கு முன் மின்னணு நோய் காண் (சி.டி.ஸ்கேன்) இயந்திரம் பொருத்தப்பட்டு நோயாளிகள் நோய் குறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தொடர் கனமழை பெய்ததால், சி.டி.ஸ்கேன் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் மழைநீர்க் கசிவு ஏற்பட்டு அறையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதையறிந்த இயந்திரத்தைப் பராமரிக்க நியமிக்கப்பட்டிருந்த அலுவலர், மருத்துவமனை முதன்மை மருத்துவர் மற்றும் மருத்துவப் பொறியியல் துறைக்கும் தகவல் அளித்துள்ளார்.

பின்னர், இயந்திரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இயந்திரம் தண்ணீரில் நனையாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த மருத்துவமனை நிர்வாகம், கட்டிடத்தைச் சீர்படுத்தும்வரை இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்தி வைத்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைத் தகவலின் பேரில், கட்டிடப் பராமரிப்பை மேற்கொண்டுள்ள விருத்தாசலம் பொதுப்பணித் துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து, கட்டிடத்தின் மேல் தளத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளதால் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, அதன் மீது மீண்டும் சிமென்ட் பூசிவீட்டுச் சென்றுள்ளனர். இருப்பினும், தொடர் மழையால் கட்டிடத்தில் மழைநீர்க் கசிவு ஏற்படுவதாகவே அங்கு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சில மருத்துவர்கள் கூறுகையில், "பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் ஏராளமானோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே, அவர்களின் நலன் கருதி மிகுந்த சிரமத்திற்கிடையே சி.டி.ஸ்கேன் இயந்திரம் இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த ஓராண்டாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சி.டி.ஸ்கேன் பார்த்து வந்தோம். தற்போது மழையினால் இயங்காததால், நோயாளிகளை சி.டி.ஸ்கேன் எடுக்க கடலூர் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கிறோம்.

ஆனால், அவர்கள் அங்கு செல்ல கார் வாடகை, நேர விரயம் உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு, ஒவ்வொருவரும் ரூ.3,000 செலவு செய்து உள்ளூரிலேயே சி.டி.ஸ்கேன் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மருத்துவனையில் தலைமை மருத்துவர் எழிலிடம் கேட்டபோது, "கனமழை காரணமாக கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இயந்திரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொடர் மழையிலும் பொதுப்பணித் துறையினர் கட்டிடப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டு கசிவு ஏற்படும் இடங்களைச் சீரமைத்துள்ளனர்.

ஓரிரு நாட்களில் சி.டி.ஸ்கேன் இயந்திரம் பயன்பாட்டுக்கு வரும். நோயாளிகளுக்கு இங்கேயே சி.டி.ஸ்கேன் எடுக்கப்படும். அதேபோன்று, பிணவறையில் குளிர்சாதனப் பெட்டி இயங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அங்கும் குளிர்சாதனப் பெட்டி செயல்பாட்டுக்கு வந்துள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x