Published : 19 Dec 2020 01:05 PM
Last Updated : 19 Dec 2020 01:05 PM

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி; ராமநாதபுரத்தில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், ராமநாதபுரத்தில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

“குமரிக் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம் (சென்டி மீட்டரில்):

நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) 13, திருத்துறைப்பூண்டி (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7 , தலைஞாயிறு (நாகப்பட்டினம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருத்துறைப்பூண்டி ( திருவாரூர்) தலா 6, அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) 5, குடவாசல் (திருவாரூர்), காரைக்கால் (காரைக்கால்), பாண்டவையர் ஹெட் (திருவாரூர்), புவனகிரி (கடலூர்) தலா 4 செ.மீ.

மன்னார்குடி (திருவாரூர்), திருவாரூர், தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), பாம்பன் (ராமநாதபுரம்), ராமநாதபுரம், மதுக்கூர் (தஞ்சாவூர்), வட்டானம் (ராமநாதபுரம்), சிதம்பரம் (கடலூர்), செந்துறை (அரியலூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), கிராண்ட் அணைக்கட்டு (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), மண்டபம் (ராமநாதபுரம்), சீர்காழி (நாகப்பட்டினம ) தலா 3 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடகிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று அடுத்த 3 நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x