மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி மின்வாரிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துப் பதிலளிக்க துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தைத் தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள் கடந்த 4-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், போராட்டத்தைக் கைவிடாவிட்டால் ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், நிவர் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின் கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன. மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, இவை சரி செய்யப்படாததால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, டிசம்பர் 4-ம் தேதி முதல் திடீரென வேலைநிறுத்தத்தில் சட்டவிரோதமாக ஈடுபட்டவர்கள் மீது துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்குப் பதிலளிக்கும்படி, துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலாளர், புதுச்சேரி மின்துறைச் செயலாளர், மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்புக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 16-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in