Published : 19 Dec 2020 10:10 AM
Last Updated : 19 Dec 2020 10:10 AM

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தி விட்டால் பெரிய ஆளா? - கமல்ஹாசனுக்கு நிர்வாகம் பற்றி என்ன தெரியும்? - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடத்தி விட்டால் கமல்ஹாசன் பெரிய ஆளா? அவருக்கு நிதிநிலை, நிர்வாகம் பற்றி என்ன தெரியும்? எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேட்டுள்ளார். மதுரை அருகேயுள்ள பரவை பேரூராட்சியில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் பெட்ரோல் விலை உயர்ந்தபோது முக.ஸ்டாலின் எங்கே இருந்தார். மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறது. அதிமுகவை அடிமை அரசு எனக் கூற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை. அவர்கள்தான் காங்கிரஸ் ஆட்சியில் அடிமைகளாக இருந்தனர்.

புதிதாகக் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு நிதிநிலை, நிர்வாகம், சட்ட நுணுக்கங்கள் எப்படி எனத் தெரியாது. கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. எந்த அமைச்சர்களும் முதல் வரும் பார்ப்பதில்லை. எங்களுக்கு அதற்கான நேரமும் இல்லை. கமல்ஹாசன் எதைச் சொல்லியும் அதிமுக தொண்டர்களைப் பிரிக்க முடியாது. கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. மக்களை நம்பியே உள்ளது.

மக்கள் எங்களை நம்புகிறார்கள் மக்களை நாங்கள் நம்புகிறோம் கூட்டணி என்பது வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காகவே. கூட்டணியில் இவர்கள் இருந்தால் தான் வெற்றி என்ற நிலைப்பாடு அதிமுகவுக்குக் கிடையாது. அதிமுக அரசின் திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலில் மக்களைச் சந்திப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x